December 25, 2012

ஐயப்பன் விரதம்

ஐயப்பன் கதை அனைவரும் அறிந்ததே அதனால் ஐயப்பன் விரதத்தை பற்றி பார்ப்போம். இதை பலரும் ஏன் மாலை அணிகிறோம் எதற்க்காக ப்ரம்மசரியம் செய்கிறோம் என்று பலர் தவறான கருத்தை தெரிந்து வைத்து கொண்டுள்ளார்கள்.  அதை பற்றி சரியான விளக்கத்தை இன்று பார்ப்போம்

ஐயப்பனின் தீவிர பக்தரான மாதவ நாயரை சனீஸ்வர பகவான் ஏழரை ஆண்டு பிடிக்க போகும்போது ஐயப்பன் இடையில் வந்து பிடிப்பின் நோக்கத்தை அறிந்தார்.பின் தன் பக்தர்களை பிடிக்க கூடாது எனவும் கேட்டார் அதற்கு சனீஸ்வர பகவான் சில கட்டளை விடுத்தார். அதை பின் பற்றினால்தான் அவர்களை, தான் பிடிக்கமாட்டேன் என்றார்.ஐயப்பனும் அந்த கட்டளைகளை கேட்டு தன் பக்தர்களுக்கு கூறினார். அவை பின் வருமாறு

ஐயப்ப பக்தன் தன் மனைவியை விட்டு (ஒரு மண்டலத்துக்கு)48 நாட்கள் பிரிந்து இருந்து(ஒரே வீட்டில் இருக்கலாம் ஆனால் உறவு வைத்து கொள்ளக்கூடாது), ஐயப்பனை சபரிமலை வந்து தரிசனம் செய்ய வேண்டும் 

சபரிமலை ஏறுதல் கால் வழி பயணமாக இருக்க வேண்டும் கல்லும் முல்லும் காலில் படவேண்டும் (காலணி இல்லாமல் 48 நாட்கள் இருக்க வேண்டும் )

பால்,பழம் உண்டு ,அறுசுவை உணவை தவிற்க வேண்டும்.

அதிகாலை,மாலை பொழுதில் குளித்து சூரிய தேவ(சனீஸ்வர பகவானின் தந்தை) , ஐய்யப பூஜை செய்ய வேண்டும் 

 ஐய்யப்ப பக்தர்கள் கருப்பு வஸ்த்திரத்தை (துணியை) தவிர வேறு நிற உடை அணியக்கூடாது (கருப்பு நிறம் சனீஸ்வரருக்கு பிடித்தது)(சிவப்பு நிறம் முருகனுக்கு உகந்தது)

 தரையில் மட்டுமே படுக்க வேண்டும் தலையணையும் தவிர்த்து உறங்கவேண்டும் .

மாலை அணிதல் என்பது தான் காம,கோபங்களுக்கு உடன்படாமல் கட்டுபட்டு விரதம் இருப்பதை காட்ட மாலை அணியவேண்டும் 

அனைவரையும் கடவுளாக பார்க்க அனைவரையும் சாமி என்று அழைக்க வேண்டும், என்பதையும் நினைவுபடுத்தி கொண்டேயிருக்க 48 நாட்கள் மாலையுடன் ஐயப்பன் கூடவே வர வேண்டும்.(ஐயப்ப டாலர் மாலையில் இருக்க வேண்டும் ஒரு சிலர் மாலை கிடைக்கவில்லை எனறால் முருக மாலைஅணிவார்கள் அது தவறு)

தான் செய்த பாவத்தை கழிக்க பம்பையில் நீராட வேண்டும் இது முக்கியம்

இந்த கடுமையான விரதத்தை யார் கடைபிடிக்கிறார்களோ அவர்களை தான் பிடிக்கமாட்டேன் என்று ஐயப்பனுக்கு சனீஸ்வரபகவான் வரம் அளித்துள்ளார் .அதனால் தான் ஐயப்பன் தன்னை வேண்டி வருபவர்க்கு இந்த விரதத்தை அளித்தார்

சனீஸ்வரர் ஒருவரை பிடித்தால் அவரை மனைவியுடன் பிரித்து காடு மேடுகளில் அலையவைத்து அங்குள்ள பழங்களை கொடுத்து கல்லிலும் முல்லிலும் நடக்க வைத்து தரையிலே படுக்கவைத்து கடுங் குளிரை ஏற்படுத்தி படாதபாடு படுத்துவார் உடுக்ககூட உடையில்லாமல் செய்து விடுவார்.ஆனால் அவரை விட்டு செல்லும் போது அவர் இருந்த நிலையை விட பண்மடங்கு செல்வத்தையும் சிறப்பையும் தருவார் 


ஸ்ரீ ஐயப்ப மூலமந்திரம்

ஓம்! க்ரும் நம; பராய
கோப்த்ரே நம

சில பொருள் விளக்கம் 


ஐயப்பன் 

         அய்யா அப்பா இதை மணிகண்டன் தாய் தந்தையரை பிரியும்போது அவர்கள் கூறியதால் அதையே தன் பெயராக கொண்டார்

சபரிமலை

             சபரிக்கு மோட்சம் தந்து அவர் இருந்தமலையிலேயே கோவில் கொண்டார் அதுவே சபரிமலை 

ஹரிஹரசுதன்

         ஹரி - திருமால் , ஹரன் - ஈஸ்வரன் , சுதன் - மகன் 

பம்பை நதி

        கங்கையில் இருந்து எடுத்த நீரை கொண்டு ஐயன் உண்டக்கிய நதி

ஒரு மண்டலம்
                   
               48 - நாட்கள் என்பது ஒரு மண்டலம் 

 48 - நாட்கள்                
              
                     12 ராசி 9 கிரகம் 27 நட்சதிரம் இவை மூன்றும் இந்த 48 -நாட்களில் வந்துவிடும்  
                                                         12+9+27 = 48



December 22, 2012

வைகுண்ட ஏகாதசி


வைகுண்ட ஏகாதசி மகிமை



விஷ்ணுபகவான் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, அவருடைய இரு காதில் இருந்து மது, கைடபர் என்ற இரு அசுரர்கள் தோன்றினார்கள். அந்த இருவரும் தேவர்களை மிகவும் கொடுமைப்படுத்தினார்கள். இந்த அசுர சகோதரர்களை அடக்க முடியாமல் திணறினர் தேவர்கள். அதனால் விஷ்ணுவின் சக்தியால் உருவான இந்த அசுரர்களை விஷ்ணுபகவான் ஒருவரே அடக்க முடியும் என்ற முடிவில் பகவானிடம் தேவர்கள் முறையிட, பெருமாள் மது, கைடபருடன் போர் செய்தார். ஸ்ரீமந் நாராயணனிடம் யுத்தம் செய்ய முடியாமல் அவரிடம் அசுர சகோதரர்கள் சரண் அடைந்தார்கள்.
“பகவானே…தங்களின் சக்தியால் நாங்கள் உருவானதால் எங்களுக்கு நீங்கள் கருனை காட்ட வேண்டும்.” என்ற பணிவாக கூறி வைகுண்டத்தில் பெருமாளுடன் இருக்கும் பாக்கியத்தையும் பெற்றார்கள் இந்த அசுர சகோதரர்கள். தங்களை போல் பலரும் இந்த பாக்கியம் பெற வேண்டும் என்று என்னி அசுரர்களாக இருந்தாலும் நல்ல மனதுடன் பெருமாளிடம் வேண்டினர்.
“எம்பெருமானே…தாங்கள் வைகுண்ட ஏகாதசி நாளில் வைகுண்ட வடக்கு வாசல் வழியாக, அர்ச்சாவதாரத்தில் (மனித வடிவம்) தாங்கள் வெளிவரும்போது, தங்களை தரிசிப்பவர்களுக்கும், தங்களை பின்தொடர்ந்து வருபவர்களுக்கும், அவர்கள் தெரிந்து செய்த பாவங்கள், அறியாமல் செய்த பாவங்கள் யாவும் நீங்கி அவர்களுக்கு முக்தி அளிக்க வேண்டும்.” என்று கேட்டுக் கொண்டனர் அசுர சகோதரர்கள். .அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு, வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, பெருமாள் பவனி வரும் நிகழ்ச்சி இனிதே நடைபெறுகிறது.

ஏகாதசி


ஏகாதசி என்றால் தமிழில் பதினொன்று எனப்பொருள்படும் . ஏகாதசி அன்று விரதம் மேற்கொள்வதை அனைத்து சாஸ்த்திரங்களும் வழியுருத்துகின்றன”. மற்ற விரதங்களைவிட ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பது மிக சிறப்பானதாகும். 

இந்துக்கள் ஒவ்வொரு ஏகாதசி நாளிலும் உண்ணாநோன்பிருந்து இறைவனை வழிபடுவதால் தங்களின் பாவச்செயல்கள் மன்னிக்கப்பட்டு சங்கடங்கள் தீரும் என நம்புகின்றனர். விஷ்ணுபுராணம் என்ற நாலில் அனைத்து ஏகாதசி நாட்களிலும் உண்ணாநோன்பு இருந்து பெறும் பயனை வைகுண்ட ஏகாதசி அன்று இருக்கும் ஒருநாள் விரதத்தால் பெறலாம் எனக் கூறப்பட்டுள்ளது


வைகுண்ட ஏகாதசி அன்று அனந்தசயனத்தில் இருக்கும் கோவிலுக்கு செல்வது உத்தமம்.



சித்தமருத்துவத்தில் ஏகாதசி


பொதுவாக சித்தமருத்துவத்தில் கூட ஏகாதசி அன்று உணவு அருந்துதல் கூடாது என்பர் ஏன் என்றால் அன்று சாப்பிடும் உணவின் தன்மை அதிகப்படும்
அது விஷமானாலும் சரி அமிர்தமானாலும் சரி



December 19, 2012

திருச்செங்கோடு-சுயம்பு மரகத லிங்கம் பாகம்-4

சுயம்பு மரகத லிங்கம்- வரலாறு 

             
 பிருங்கி முனிவர், கயிலாயம் வரும் வேளைகளில் சிவபெருமானை மட்டும் வலம் வந்து வழிபடுவார். அவரது அருகில் இருக்கும் உமாதேவியைக் கண்டு கொள்ளமாட்டார். இருவரும் ஒன்றாக அமர்ந்திருக்கும் நிலையில், சிவனை மட்டும் வணங்கும் வகையில், வண்டு வடிவம் எடுத்து சுற்றி வந்து வழிபடுவார். இதனால் கோபமடைந்த பார்வதி, ""முனிவரே! சக்தியாகிய என்னை அவமதித்ததால், நீர் சக்தி இழந்து போவீர்,'' என சாபமிட்டாள்.

இதையறிந்த சிவன், "நானும் சக்தியும் ஒன்றுதான். சக்தியில்லையேல் சிவமில்லை' எனக்கூறி உமையவளுக்கு தன் இடப்பாகத்தில் இடம் கொடுத்தார். இடப்பாகத்தில் தான் இதயம் இருக்கிறது. மனைவி என்பவள் இதயத்தில் இருக்க வேண்டியவள் என்பதற்கேற்ப இந்த சம்பவம் நிகழ்ந்தது. 

பார்வதி தேவி இடப்பாகம் பெறுவதற்க்கு இந்த மலையில் தான் வந்து தவம் புரிந்து கேதார கவுரி விரதம் இருந்து இடப்பாகம் பெற்றார்.(இக்கோயிலில் கேதார கவுரி விரதம், புரட்டாசி வளர்பிறை அஷ்டமி திதியில் ஆரம்பித்து 21 நாள் கடைபிடிக்கப்படுகிறது).அப்படி சிவனை நினைத்து தவம் செய்யும் போது சிவ பொருமான் லிஙக வடிவமாக வந்து காட்சி தந்து மறைந்தார் பின் அந்த லிங்கத்திலேயே பார்வதியும் கலந்தார்

இந்த லிங்கத்தின் அருமை அறிந்த பிருங்கி முனிவர் மலையில் தனது மூன்று காலால் நடந்தே வந்து லிங்கத்தை தரிசனம் செய்தார். தனது மூன்றாம் காலை துறந்து இழந்த சக்தியை பெற்றார். பின் அந்த லிங்கத்தை அங்கேயே நிறுவினார். பின் அந்த லிங்கத்தின் சக்தியை எடுத்து கூறி அதை மார்கழி மாதம் மட்டும் எடுத்து அபிஷேகம் செய்து பின் சூரியன் உதயமாவதற்க்குள் எடுத்து பேழையில் வைத்து விடவேண்டும் என்று தனது சீடர்களுக்கு கட்டளையிட்டார் (போகர் பழனியில் புலிப்பாணி முனிவருக்கு இட்டது போலே சில விதிமுறைகள்)மீதி நேரத்தில் சதாரணமாக இந்த லிஙத்தை (மரகதலிங்கம்) வைத்து விடுங்கள் என்றார் பின் அர்த்தநாரீசர் திருவுருவத்தை முக உரு இல்லாமல் வெண்பாசாணம் கொண்டு செய்தார் பின் அங்கு ஒரு ஊற்று நீரையும் ஏற்படுத்தி அந்த நீரை பக்தர்களுக்கு கொடுக்குமாறு செய்தார்.

சுயம்பு லிங்கத்தின் மர்மம்


மரகதலிங்கத்துடன் மூலவர்

மரகதலிங்கம் இல்லாமல்
தினமலர் மாவட்டகோவில்கள் பகுதியில் சுயம்புலிங்கத்தை சுட்டி காட்டி உள்ளதை பாருங்கள்
           


      யார் இந்த மார்கழி மாதத்தில் குளித்து முடித்து மலையின் மீது நடந்தே வந்து இந்த சுயம்பு லிங்கத்தை தரிசனம் செய்கிறார்களோ அவர்க்கு வாழ்வில் பல நல்ல மாற்றங்கள் ஏற்படும் என்பது ஐதீகம் அல்ல உண்மை நாங்கள் அதை கண் கூடாக கண்டவர்கள் அதனால் எப்பாடுபட்டாவது பக்தர்கள் இதை வந்து பார்க்கவேண்டும் என கேட்டு கொள்கிறேன் குறிப்பு குறைந்தது 5 மணிக்குள்ளாக கோவிலில் இருக்க வேண்டும் இல்லை என்றால் அதற்க்கு பதிலாக வேறு ஒரு லிங்கம் வைத்து விடுவார்கள் இது அதை விட சற்று பெரியதாக இருக்கும் இது தான் சாதரணமான தினத்தில் வைக்கபடும் லிங்கம்.  இந்த உண்மை பலரும் மறைத்து உள்ளனர்.அங்குள்ள வம்சாவழிகளுக்கு மட்டுமே தெறிந்த உண்மை. நாங்கள் பெற்ற இன்பத்தை அனைவரும் பெற வேண்டும் என்பதற்க்காக இதை கூறினேன்.மலையின் பஸ் ரூட்டு வழியாக நடந்து செல்லலாம்.    

நாகமாணிக்கம் மர்மம்


 நாகமாணிக்கம் எங்குள்ளது என்று தெரியவில்லை.சுயம்பு மரகத லிங்கத்தின் பால் அபிஷேகம் பார்பது மிகவும் கொடுத்துவைத்திருக்கவேண்டும் அந்த பாக்கியம் எங்கள் குழுவுக்கு 17.12.12(மார்கழி-2)திங்கள் கிழமை கிடைத்தது.


அமைவிடம்:


திருச்செங்கோடு ஈரோடிலிருந்து 18 கிமீ தொலைவிலும் சேலத்திலிருந்து 45 கிமீ தொலைவிலும் நாமக்கலிருந்து 32 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.

                                           
                                             ஓம் நமசிவய !!!!!


     
   

December 18, 2012

திருச்செங்கோடு-சுயம்பு மரகத லிங்கம் பாகம்-3

மலை கோவில் சிறப்புகள்(அதிசயங்கள்)

மூலவர் திருவுருவம்

மாதொருபாகனின் திருமேனி முழுவதும் வெண்பாசானம் எனப்படும் அற்புத மூலிகைக் கலவையாகும்.

உலகில் சிவபெருமான் 64 விதமான வடிவங்களை தாங்கியிருக்கிறார் . அவற்றில் 22வது வடிவம் இந்த அர்த்தநாரீஸ்வரமூர்த்தி வடிவமாகும்

அம்மையப்பனின் கருநிலைக் கூடத்தில் விலைமதிப்பற்ற பிருங்கி முனிவர் வழிபட்ட சுயம்பு மரகதலிங்கம், நாக மாணிக்கம் இன்றும் பக்தர்களால் பூஜிக்கப்பட்டு வருகிறது.
பழனி மரகத லிங்கம்

வேலவனை பாதுகாக்கும் இரு துவாரபாலகர்கள் சிலைகளை உற்று நோக்கினால் அதில் உள்ள கற்சிலை மணிகள் கண்கொள்ளா காட்சியாகும்.

ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானமாகத் தோற்றமளிக்கும் அர்த்தநாரீஸ்வரருக்கு முக உருவ வழிபாடு இல்லை.

அம்மையப்பனின் திருவடியின் கீழ் அமைந்துள்ள தேவதீர்த்தம் எப்பொழுதும் வற்றாத தீர்த்தமாகும்.

வேறு எங்கும் காணமுடியாத முக்கால் உடைய முனிவர் பிருங்கி மஹாரிஷியின் திருவுருவமானது அம்மையப்பனின் வலது பாதத்தின் அருகில் காணப்படும்.


மூலவர் செங்கோட்டுவேலவர்
திருச்செங்கோட்டில் எழுந்தருளியுள்ள செங்கோட்டுவேலவன் என்ற முருகப்பெருமானின் திருவுருவம் மிகவும் வித்தியாசமானது. அவர்தம் இடது கையில் சேவலை எடுத்து இடுப்பில் அணைத்தபடியும், அவர்தம் வலது கையில் வேலையும் பிடித்திருப்பது உலகிலேயே வேறு எந்த கோயிலிலும் இல்லாத சிறப்பாகும்.

அதே போல் முருகபெருமானின் வலது கையில் உள்ள வேலானது பெருமானின் தலையிலிருந்து சற்று உயரமாக இருக்கும். மற்ற அனைத்து முருகபெருமான் சன்னதியிலும் வேலானது சற்று தலையிலிருந்து உயரம் குறைவாகவே இருக்கும். செங்கோட்டுவேலவரின் இந்த அதிசிய வடிவம் உலகில் வேறு எங்கும் இல்லாத ஒன்றாகும்.

சுயம்பு மரகத லிங்கத்தின் அதிசய வரலாறு மகிமைகள்  பாகம் -4 ல்

திருச்செங்கோடு-சுயம்பு மரகத லிங்கம் பாகம்-2

மலையின் ஆண் வடிவம் இது மலையின் முன் பகுதி

சித்தர்கள்

சதுரகிரி,பொதிகை,கொல்லிமலை,போன்றே இந்த மலையிலும் பல சித்தர்கள் தங்கி தவம் புரிந்துள்ளனர்.மேலும் இந்த மலையில் பல குகைகள், சஞீவினி மூலிகைகள் உள்ளன. இந்த மலையில் மூலிகை காவல் தெய்வமாக அனுமன் உள்ளார். நான் சில மூலிகைகள் தேடுகின்ற போது பல தடவை முக்கியமான மூலிகை உள்ள யிடத்தில ஒரு குரங்கு கூட யில்லை ஆனால் நான் மூலிகையின் அருகில் சென்றால் பல குரங்குகள் வந்துவிடுகின்றன. அதே போலத்தான் இங்கு ஒரு குகை ஒன்று உள்ளது அங்கு சென்றால் உதகஞ்செயநீர்(அகத்தியர் பரிபூரணம்1200) என்ற ஒரு நீர் உள்ளது அதை காட்ட என் குரு என்னை அழைத்து சென்ற போது அனுமன் படைகளால் நாங்கள் சூழ பட்டோம் பின் என் குரு அனுமத் கவசம் செய்து விலகி செல்லுமாறு செய்தார் பின் தான் அங்கு சென்றோம்.
மலையின் பெண் வடிவம் இது மலையின் பின் பகுதி


இங்கு அல்லி சுனை ஒன்று உள்ளது அதன் அருகில் தான் சித்தர் பீடம் உள்ளது.  ஒரு சித்தர் தினம் அங்கு வந்து வழிபடுவதாக என் குரு பலமுறை கூறியிருக்கிறார். மேலும் இந்த மலையில் ஆரா சுவாமி என்கிற ஒருவர் வாழ்ந்து வந்தார் அவர் இந்த மலையில் ஜீவ சமாதியாகி உள்ளார் என்றும் பல மூலிகைகள்,சித்துகள் அவருக்கு தெரியும் என்று கூறியிருக்கிறார் .மேலும் போகர் கூறிய மலைதாங்கி(வர்மகலையில் நோக்கு வர்மத்திற்க்கு பயன்படும் மூலிகை அது)  என்ற மூலிகை இருப்பிடம் ஒரு சித்தர் இங்கு தான் காட்டினார் என்று என் குரு கூறியதுண்டு 

இந்த மலையில் நடந்த அனுபவம் நிறைய உண்டு அதை பின் ஒரு பதிவில் கூறுகிறேன்.

பதிவின் நோக்கம் பாகம் -3 நாளை


திருச்செங்கோடு-சுயம்பு மரகத லிங்கம் பாகம்-1


திருச்செங்கோடு வரலாறு சுருக்கம்

முன்னொரு காலத்தில் ஆதிசேடனுடன் வாயுதேவனும் தங்களில் யார் பலசாலி என்பதை அறிய இருவரும் போர் செய்தனர். இப்போரினால் உலகில் பேரழிவுகளும், துன்பங்களும் நேரிடுவதை கண்ட முனிவர்களும், தேவர்களும் அவர்களிடம் யார் பலசாலி என்பதை அறிய ஒரு வழி கூறி அதில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களே பலசாலி என்றனர். இதன்படி ஆதிசேடன் தன்படங்களால் மேருவின் சிகரத்தின் முடியை அழுத்தி கொள்ளவேண்டும். வாயுதேவன் தன் பலத்தால் பிடியை தளர்த்த வேண்டும் என்றும் கூறினர். ஆனால் வாயுதேவன் பிடியை தளர்த்த முடியவில்லை இதனால் கோபம் கொண்ட வாயுதேவன் தன் சக்தியை அடக்கி கொண்டார். இதனால் உயிரினங்கள் வாயு பிரயோகமற்று மயங்கின. இந்த பேரழிவை கண்ட முனிவர்களும், தேவர்களும் ஆதிசேடனின் பிடியை தளர்த்த வேண்டினர். ஆதிசேடம் தன் பிடியை கொஞ்சம் தளர்த்தினார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட வாயுதேவன் தன் சக்தியால் அப்பகுதியை வேகமாக மோதி அச்சிகரத்துடன் ஆதிசேடன் சிரத்தையும் பெயர்த்து பூமியில் மூன்று செந்நிற பாகங்களாய் சிதறுண்டு விழுந்தது. அவற்றில் ஒன்றுதிருவண்ணாமலையாகவும், மற்றொன்று இலங்கையாகவும், மற்றொன்று நாகமலையாகவும் (திருச்செங்கோடாகவும்) காட்சியளிக்கிறது.

இந்த மலையின் சிறப்புகள் படங்களின் மூலம் உணரலாம்















 இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த நாகமலையில் பல அற்புதங்கள் உள்ளன
மேலும் இந்த திருச்செங்கோடு-சுயம்பு மரகத லிங்கம் பதிவின் அவசியமும் அடுத்த பதிவில் காத்திருக்கிறது